சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

முதல் ஆயிரம்   குலசேகராழ்வார்  
பெருமாள் திருமொழி  

Songs from 647.0 to 751.0   ( )
Pages:    1    2  3  4  5  6  Next
இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி
      இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும்
      அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித்
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி
      திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்
      கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே



[647.0]

உடயவர்அருளிச்செய்தது
இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!
தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் |பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன் |எங்கள்
குலசேகரனென்றேகூறு




[647.1]

மணக்கால்நம்பிஅருளியது
ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று |அவர்களுக்கே
வாரங்கொடுகுடப்பாம்பில்கையிட்டவன் |மாற்றலரை
வீரங்கெடுத்தசெங்கோற்கொல்லிகாவலன் வில்லவர்கோன்
சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே.




[647.2]
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த
      வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்
      மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை
      கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என்
      வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!



[648.0]
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
      எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்
      தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்-
அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற
      அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு
      அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே



[649.0]
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
      வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை
      அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
பாவினை அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்
      பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்
      கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே



[650.0]
Back to Top
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத்
      தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்
      தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
      மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு என்
      மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே



[651.0]
அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
      அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்
      திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்
களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்
      கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என்
      உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே



[652.0]
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
      வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத்
      தொல் நெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி
      அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
      நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே



[653.0]
கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
      கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
      கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
      திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
      வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே



[654.0]
தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள்
      குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
      மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும்
      திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்
      பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே!



[655.0]
Back to Top
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
      மண் உய்ய மண்-உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச்
      சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்
      அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு யானும்
      இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே



[656.0]
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்
      திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்
      கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்
      கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்
      நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே



[657.0]
தேட்டு அருந் திறல்-தேனினைத் தென்
      அரங்கனைத் திருமாது வாழ்
வாட்டம் இல் வனமாலை மார்வனை
      வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு-
      எய்தும் மெய்யடியார்கள்தம்
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது
      காணும் கண் பயன் ஆவதே



[658.0]
தோடு உலா மலர்-மங்கை தோளிணை
      தோய்ந்ததும் சுடர்-வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை
      மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடிப் பாடி அரங்க ஓ என்று
      அழைக்கும் தொண்டர் அடிப்-பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து
      ஆடும் வேட்கை என் ஆவதே?



[659.0]
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம்
      கீண்டதும் முன் இராமனாய்
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்
      சொல்லிப் பாடி வண் பொன்னிப் பேர்-
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு
      அரங்கன் கோயில்-திருமுற்றம்
சேறு செய் தொண்டர் சேவடிச் செழுஞ்
      சேறு என் சென்னிக்கு அணிவனே



[660.0]
Back to Top
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன்
      உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
      அரங்கனுக்கு அடியார்களாய்
நாத் தழும்பு எழ நாரணா என்று
      அழைத்து மெய் தழும்பத் தொழுது
ஏத்தி இன்பு உறும் தொண்டர் சேவடி
      ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே



[661.0]
பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம்
      இறுத்தப் போர்-அரவு ஈர்த்த கோன்
செய் சிலைச் சுடர் சூழ் ஒளித் திண்ண
      மா மதில்-தென் அரங்கனாம்
மெய் சிலைக் கருமேகம் ஒன்று தம்
      நெஞ்சில் நின்று திகழப் போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து
      என் மனம் மெய் சிலிர்க்குமே



[662.0]
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம்
      ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி
      இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும்
      திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்
      காதல் செய்யும் என் நெஞ்சமே



[663.0]
கார்-இனம் புரை மேனி நற் கதிர்
      முத்த வெண்ணகைச் செய்ய வாய்
ஆர-மார்வன் அரங்கன் என்னும்
      அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து
      கசிந்து இழிந்த கண்ணீர்களால்
வார நிற்பவர் தாளிணைக்கு ஒரு
      வாரம் ஆகும் என் நெஞ்சமே



[664.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Sun, 24 Mar 2024 01:35:54 -0400
 
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

divya prabandham song